தமிழக திருத்தலங்களின் தலவரலாறு .

திருப்பரங்குன்றம்

தலவரலாறு
பாண்டிய நாடு மற்றும் சிறப்பு

"சந்தனப் பொதியமும், தண்குமரித்துறையும், புண்ணியப் பொருநையாகிய தாமிரபரணி நதியும் தமிழ் கண்டதோர் வையை நதியும் தன்னகத்துடையது"

நின்நாடு நல்ல தமிழுடைத்து ஒளவையார்

பன்று தொல் புகழ் பாண்டி நன்னாடு சேக்கிழார்

தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாடென்று மாணிக்கவாசகர்

பாண்டிய நாடே பழம்பதி என மாணிக்கவாசகரால் போற்றப்படுவது செந்தமிழ்ப் பாண்டிய நாடு. இது சந்தனப் பொதிய செந்தமிழ் முனிவனும், சவுந்திர பாண்டியன் எனும் தமிழ்நாடனும், சங்கப்புலவரும் தழைத்தினிதோங்க வைத்த மங்கல மாண்பினை உடையது.

மதுரையின் மாண்பு

ஆடக மதுரை மண்சுமந்த நெற்றிக்கடவுள் கூலிமதுரை என்னும் மணிமொழிகள் பாராட்டக் கூறும் மதுரை மாநகர் பாண்டிய நாட்டின் தலைநகரமாகும்.சென்ற காலத்தின் பழுதிலாதிறனும், எதிர்காலத்தின் சிறப்பும் ஒருங்கே வாய்ந்த பழம்பதி மதுரை. இது கண்ணுதற் பெருமான் புலவரோடு இருந்து புண்ணியத் தமிழ் ஆய்ந்த ஞானபூமி ஆகும். மேலும் இது மதிமலி புரிசை மாடக்கூடல் என்று முழுமுதற் கடவுளே மொழிந்த பெருமைசால் மூதூராகும். இந்நகர் பற்றி, மும்மைப்புவனங்களின் மிக்க மூதூர் என்றும் சால்பாய மும்மைத் தமிழ் தங்கிய அங்கண் மூதூர் என்றும் சேக்கிழார் பெருமான் திருவாய் மலர்ந்தருளினார். இந்நகரின் அணியாகச் சான்றோர் கவியென வடபால் ஓடுவது வையையாறு, இவவாற்றின் கரைகளிலே பண்டைய நாளில் முத்தமிழ் மணம் கமழ்ந்தது. அதன் அலைகளிலே தமிழ் ஏடு தழைத்தது. இதனாலன்றோ தமிழ் கண்டதோர் வையை என்று புகழ்ந்து இசைத்தார் பாரதியார். இவ்வாற்றின் கரையிலே தான் ஆலவாய் அண்ணல் மண்சுமந்த பாடற்பரிசு பெற மண் சுமந்த பணி செய்தார். அங்கயற்கண்ணி அம்மையாரும், சொக்கலிங்கப் பெருமானும் கோயில் கொண்டுள்ள ஆலவாய் என்னும் பெயருடைய திருக்கோயில், நகரின் நடுவே அமைந்து விளங்குறது.

கோயில் நகரமெனவும், விழா நகரமெனவும் சிறப்புக்களை உடையது இந்நகரேயாகும். இன்றைய தமிழ் மாநிலத்திம் சென்னைக்கு அடுத்த பெரிநகரமாக மதுரை விளங்குகிறது. இத்தகு சிறப்புகளை உடைய மதுரையின் தெற்கே 5 கல் தொலைவில் திருப்பரங்குன்றம் அமைந்துள்ளது.

திருப்பரங்குன்றம் தலச்சிறப்பு

மதுரைப் புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே செல்லும் வழியில் பசுமலைக்கு அடுத்த நிலையமாக இவ்வூர் உள்ளது.

நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையில் மாடமலிமறுகில் கூடற்குடவாய்ன் என்று திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்கே இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. கந்த புராணத்தில் கச்சியப்பரும் கூடலின் குடதிசை அமர பரங்குன்று என்று குறிப்பிட்டுள்ளைர். மதுரை நகரின் கீழ்க்கிசையிலிருந்து நோக்குவார்க்குப் பரங்குன்றம் தென்மேற்குத் திசையில் காட்சி அளிப்பதை இன்றும் காணலாம்.

நகரம் மேற்கே விரிந்துள்ளமையால் பரங்குன்றம் தெற்கித்திசையில் இன்று காணப்படுகிறது. பாண்டிய நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றாகப் பரங்குன்றம் திகழ்கிறது.

அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கையும் இப்பூவுலக மக்கள் பெற்றுய்யும் வண்ணம் பரம கருணாமூர்த்தியாகிய முருகப்பெருமான் திருவருளே திருமேனியாக சைவசமயக் குரவர் நால்நருள் திருஞானசம்பந்தர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் ஆகிய இருவருடைய தேவாரப்பதிகங்கள் பாடப்பெற்று பாண்டிய நாட்டின் பதினான்கு சைவத் தலங்களுள் திரிப்பரங்குன்றம் ஒன்றாக திகழ்கின்றது. இவ்வூர் இவர்களால் இன்னகர் நன்னகரென்ரு சிறப்பிக்கப்படுகிறது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளை முறையாகப் பெற்று பதிகளில் இது சாலச் சிறந்தது. மக்கள் பலரும் நாளும் வந்து தம் காரிய சித்தி அடையும் தலமாக விளங்கும் இத்திருப்பரங்குன்றம் மிக சிறப்புடையதாகும்.

பாண்டிய நாட்டில் உள்ள 14 சிவதலங்கள்

1. திருஆலவாய் மதுரை 2. திருஏடகம்

3. திருப்பரங்குன்றம் 4. திருஆப்பனூர்

5. திருக்கொடுங்குன்றம் பிரான்மலை 6. திருப்புத்தூர்

7.திருப்புவனவாயில் 8. திருஇராமேசுவரம்

9. திருஆடானை 10. திருக்கணாப்போர்

11. திருப்புவனம் 12. திருக்குற்றாலம்

13. திருநெல்வேலி 14. திருச்சுழியல்

இருப்பிடம் மற்றும் போக்குவரத்து வசதி திருப்பரங்குன்றம் என்னும் இயற்கை எழில் சூழ்ந்துள்ள அழகுமிக்க சிற்றூரில் முந்நூறு மீட்டர் உயரமுள்ள மலையின் அடிவாரத்தில் ஊ ரின் நடுவே குன்றே கோவிலாக எழுந்துள்ள எழில்மிகு திருக்கோவிலே திருப்பரங்குன்றம் திருக்கோயிலாகும்.முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் முதற்படை வீடாகச் சிறப்புப் பெற்று விளங்குதலால், அவன் பெயராலேயே இத்திருக்கோவில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் என்றே அழைக்கப்படுகின்றது. இத்தலம் 275 தேவாரத் தலங்களுள் ஒன்றாக, பாண்டிய நாட்டின் மதுரை மாநகரிலிருந்து தென்மேற்கில் ஐந்து கல் தொலைவில் மதுரை - கன்னியாகுமரி தேசிய நெடுச் சாலைக் கருகிலேயே அமைந்துள்ளது. மதுரை புகைவண்டி நிலையத்திலிருந்து தெற்கே செல்லும் வழியில் பசுமலைக்கு அடுத்த நிலையமாக இவ்வூர் உள்ளது.

மதுரையில் இருந்து அடிக்கடி பேருந்து வசதி உள்ளது.

மதுரையிலிருந்து திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், இராஐபாளையம் வழியாக தென்காசி செல்லும் இரயில்களும், திருநெல்வேலி, நாகர்கோயில், தூத்துக்குடி செல்லும் இரயில்களும் திருப்பரங்குன்றம் இரயில் நிலையத்தில் நின்று செல்லும்.

திருப்பரங்குன்றம் திருக்கோவில் சிறப்பு

முதற்படை வீடு

முருகனுக்குரிய படை வீடுகள் ஆறு. படை வீடு என்பது பகைவரோடு போர் புரிதற்பொருட்டு ஒருவன் தன் படைகளுடன் தங்கியிருக்கும் இடத்திற்குப் பெயராகும். முருகப் பெருமான் சூரபத்மனோடு போர் புரியச் செல்லுமுன் தங்கியிந்த படைவீடுகள் பல உள்ளன. பொருள் பெற்ற ஒருவன் வறியவன் ஒருவனைக் கண்டு இன்னின்ன பெருமைகளை உடைய இன்னாரிடத்திலே சென்றால் போதும் பொருள் பெறலாம் என்று ஆற்றுப்படுத்துவதை (வழிப்படுத்துவதை) ஆற்றுப்படை என்பர். பொருளைப் பெறுவது போல் அரிளைப் பெறவும் நம் முன்னோர் ஆற்றுப்படுத்தினர். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படை இதற்குச் சான்றாகும். சில தலங்களைக் குறிப்பிட்டு அஙேகெல்லாம் எழுந்தருளியுள்ள முருகனிடம் ஆற்றுப்படுத்துவதாகத் திருமுருகாற்றுப்படை அமைந்து உள்ளது. "ஆற்றுப்படை வீடுகள்" என்பது தான் பின்னாளில் ஆறுபடை வீடுகள் என்றாயிற்று எனலாம். அவற்றுள் ஆறு தலங்கள் சிறந்தன என்று முன்னோர் கூறினர். அவை முறையே

1. திருப்பரங்குன்றம்

2. திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

3. திருவாவினன்குடி (பழனி)

4. திருவேரகம் (சுவாமிமலை)

5. குன்றுதோறாடல் (திருத்தணிகை)

6. பழமுதிர்ச்சோலை என்னும் ஆறுபடை வீடுகளாகும்.

ஆறுமுகங்கொண்ட முருகனோடு தொடர்புடைய பொருள்கள் பலவற்றை ஆறு என்று முடியும் எண்ணில் நினைப்பதில் அன்பர்கள் இன்பங்கண்டனர். நக்கீர் தாமருளிய திருமுகாற்றுப்படையில் முருகன் உறையும் இடங்களாக ஆறு இடங்களைக் குறிப்பிடுகிறார். இவர் கூறியதிலிருந்து ஆறுபடை வீடுகள் என்பது வழக்கில் வந்தது. "ஆறுதிருப் பதியில் வளர் பெருமானே"

"சகலமும் முதலாகிய அறுபதி நிலைமேவிய

தடமயில் தனிலேறிய பெருமானே"

என்று திருப்புகழில் அருணகிரிநாதரும், ஆறு திருப்பதி கண்டு ஆறெழுத்தும் அன்பினுடன் கூறுபவர் சிந்தைகுடி கொண்டேனே என்று கந்தர் கலி வெண்பாவில் குமரகுருபரரும், ஆறுபடை வீடுகளை ஆறு திருப்பதி என்றே கூறியுள்ளனர். இத்தகு சிறப்புக்கள் நிறைந்த படைவீடுகளுள் முதலாவதாக விளங்குவது திருப்பரங்குன்றமாகும்.

தலப் பெயர்கள்

திருப்பரங்குன்றம் என மக்களால் பொதுவாக அழைக்கப்படும் இத்தலம் திருப்பரங்கிரி, சுமந்தவனம், பராசலதலம், குமாரபுரிவிட்டணுதுருவம், கந்தமாதனம், கந்தமலை, சத்தியகிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதற்படைவீடு என்று பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்துள்ளது. குடைவரைக்கோயிலான இத்திருக்கோயில் சிவபெருமானுக் காகவே தோற்றுவிக்கப்பட்டதெனினும் பிற்காலத்தில் இது முருகப்பெருமானின் சிறப்புத்தலமாக விளங்கி வருவதாகிறது. தென்-தெற்கு, பரன்-கைலாயம், குன்று-மலை தெற்கு கைலாய மலை என்றும் இப்பகுதியைச் சிறப்பித்துக் கூறலாம். இத்தலம் சிவபெருமான் திருக்கோயிலும், முருகப்பெருமான் திருக்கோயிலும் ஆக இரண்டினையும் பெற்ற தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

சுற்றியுள்ள தலங்கள்

திருப்பரங்குன்றம் அருகில், திருஆலவாய், திருமால்குன்றம், பழமுதிர்சேசோலை ஆக்ய தலங்கள் உள்ளன.

தலவிருசட்சகம்

மிகப் பழமையான காலத்தே நம் முன்னோர்கள் வனத்தை இருப்பிடமாக கொண்டு வாழ்தனர். பின்னர் காடு கெடுத்து நாடாக்கப்பட்ட பின்பு தெய்வங்களுக்குப் பெருங்கோயில்கள் அமைக்கப்பட்ட போதிலும் ஆதியில் இருந்த மரத்தினை அழிக்காது அதனை இன்றளவும் சுவாமிக்கு அருகில் தலவிருட்சகம் (தலமரம்) என்ற பெயரில் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் இத்தலத்தின் ஆதிமரம் கல்லத்தி ஆகும். இந்த மரம் திருவாடாசி மண்டபத்தின் கீழ்ப்புறம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.

கோயில் அமைப்பு

கடல் மட்டத்திலிருந்து 1050 அடி உயரத்திலிருக்கும் இவ்வூரில் இருக்கும் மலை சுமார் 300 மீட்டர் உயரம் கொண்டது. திருப்பரங்குன்றம் மதுரையை அடுத்து விளங்குவதால் பழங்காலம் முதற்கொண்டே பெருமையுற்று விளங்குகிறது. மலையடிவாரத்தில் முருகப்பெருமான் திருக்கோயில் உள்ளது. கோயிலின் பெரும்பகுதி மலையின் வடபால் பாதியில் அமைந்திருக்கின்றது. இக்கோயில் வடக்குத்திசை நோக்கி அமைந்திருக்கும் அழகுமிக்க குடைவரைக் கோயிலாகும். ஊருக்குள் சென்றதும் சந்நிதித் தெருவில் மயில் மண்டபம் ஒன்று திருக்கோயிலைப் பார்த்தவண்ணம் மயில் உருவத்துடன் அமைந்துள்ளது. அடுத்துப் பதினாறுகால் மண்டபத்தைக் காணலாம். இது நான்கு தெருக்கள் கூடும் இடத்தில் அமைந்துள்ளது. இந்த இரு மண்டபங்களும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவைகளாகும்.

நுழைவாயில் - ஆஸ்தான மண்டபம்

கோயில் முகப்பில் அழகிய கண்கவர் கலைகள் கொண்ட சிற்பங்களுடன் 48 தூண்களால் அமைக்கப்பட்டதும் இராணிமங்கம்மாள் காலத்ததுமான ஆஸ்தான மண்டபம் என்னும் பெரிய மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தில் கருப்பணசவாமி கோயிலும், தூண்களில் பத்ரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு மற்றும் முருகப் பெருமான் தெய்வாணைத் திருமணக்கோலம், மக்விஷ்ணு, மகாலட்சுமி முதலிய சிற்பங்களும் உள்ளன. கோபுர வாயில் ஆஸ்தான மண்டபத்தைக் கடந்து கோபுரவாயிலை அடையலாம். இது 150 அடி உயரமுள்ள ஏழுநிலை இராஜகோபுரம் ஆகும். கோபுரத்தின் நடுவே கீழ்த்திசை நோக்கி கோபுரவிநாயகர் முன்னிருந்து அருள்செய்கிறார். இது சக ஆண்டு 1505ல் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகும். திருவாட்சி மண்டபம கோபுர வாயிலைக் கடந்ததும் திருவாட்சி மண்டபம் என்னும் அழகிய பெரிய கல்யாண மண்டபத்தை அடையலாம். இம்மண்டபத்தின் கீழ்ப்புறம் இலக்குமி தீர்த்தம், வசந்தமண்டபம் மற்றும் ஒடுக்க மண்டபமும் அமைந்தள்ளன. மேற்புறம் வல்லப கணபதி சந்நிதியும், மடப்பள்ளியும், சன்னியாசித் தீர்த்தமும் உள்ளன. மேலும் இம்மண்டபத்தின் முன்புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு பரிகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு எழிலுற்று விளங்குகின்றன. இம்மண்டபத்தில் அருள்மிகு முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபோகம் பங்குனி உத்திரத் திருவிழாவின் போது நடைபெறும். மேலும் இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு. அகன்ற இடமுடைய இம்மண்டபத்தில் தான் விழா நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் முதலியன நடைபெறும். இம்மண்டபத்தில் தான் ஊஞ்சல் திருவிழா அனி மாதம் நடைபெறும். சன்னியாசித் தீர்த்தம் தான் அபிஷேகத்திற்குப் பயன்படுகிறது. சன்னியாசித் தீர்த்தத்தின் கழிவுநீர் நந்நவனத்திற்குச் செல்லும்படி வழியமைத்து நந்நவனம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கம்பத்தடி மண்டபம் திருவாட்சி மண்டபத்தைக் கடந்து சென்றால் கம்பத்தடி மண்டபம் என்னும் அழகிய மண்டபத்தை அடையலாம். இம்மணடபத்தின் நடுவே நந்தி, மயில், மூஷிகம் முதலியவற்றின் பேருருவங்கள் உள்ளன. இம்மண்டபத்தில் கொடிமரம் உள்ளது. அம்மண்டபத்தின் தென்மேற்கில் உற்சவர் மண்டபம் உள்ளது. தென்கிழக்கில் 100 அடி நீளமுள்ள சுரங்கப்பாதை உள்ளது. அதன் அருகே சேட்டாதேவி சிற்பம் உள்ளது. மேலும் கலைக்கோட்டு முனிவரின் உருவமும் உள்ளது. இம்மண்டபத்தின் முன்பகுதியில் அண்டத்தை அணியாகக் கொண்ட அண்டராபரணர், இத்தலத்தில் தவஞ்செய்து முக்தி எய்திய பராசலர், வேதவியாசர், உக்கிரமூர்த்தி முதலயவர்களின் உருவங்கள் உள்ளன. கம்பத்தடி மண்டபத்திலிருந்து மேலேறிச் செல்லும் வாயிலின் கிழக்கிப்பக்கத்தில் அதிகார நந்தீஸ்வரர், காலகண்டி அம்மையார் உருவங்களும், மேற்குப் பக்கத்தில் இரட்டை விநாயகர் உருவங்களும் உள்ளன. மகா மண்டபம் கம்பத்தடி மண்டபத்தை அடுத்து மகா மண்டபம் உள்ளது. மகாமண்டபத்தின் மேற்புறம் கோவர்த்தனாம்பிகையின் தனிக்கோயில் உள்ளது. மகாமண்டபத்தில் உற்தவமூர்த்திகள் பலர் உள்ளனர். இம்மண்டபத்தின் கீழ்புறம் ஆறுமுகப் பெருமான் சன்னிதி உள்ளது. இங்கே பெருமானின் விழா மூர்த்தமும், அறுபத்துமூவர் உருவங்களும், நால்வர் திருவுருவும், செந்திலாண்டவன் திருவுருவும், சனிபகவானின் தனிஉருவும் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவகிரகங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கதி. கம்பத்தடி மண்டபத்திலிருந்து ஒரு வழி மேற்குப் புறமாக அடிவாரம் வரை அமைந்துள்ளது. விழாக்காலங்களில் சுவாமி வீதி உலா செல்வதற்கு இவ்வழி பயன்படுகிறது.

அர்த்த மண்டபம்

மகாமண்டபத்தை அடுத்துத் தெற்கில் அர்த்தமண்டபம் மூன்று வாயில்களுடன் உள்ளது. இம்மண்டபத்தில் இறைவன் பரங்கிரிநாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை கொற்றவை மற்றும் முருகப்பெருமான் வடக்கு நோக்கியும், பவளக்கனிவாய் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியிருக்கின்றனர். இந்த ஜந்து கருவறைகளிலும் உள்ள மூர்த்திகள், சிற்ப சாஸ்திரங்களில் ஒருவகையான கடுசர்க்கரைப்பிரயோகம் என்கின்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. சுவாமியைத் தவிர மற்ற மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. முருகப் பெருமானுக்குப் புனுகும், மற்ற மூர்த்திகளுக்குத் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது.